காணாமல் போன ஆசிரியை மீனாட்சி கொலை?
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் புதிய திருப்பமாக, அவர் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சிபிசிஐடி அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் 6 மாதங்கள் ஆகிறது. அவர் காணாமல் போன வழக்கில், அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திற்குத் தொடர்பு உள்ளதாக மீனாட்சியின் கணவர் மற்றும் குடும்பத்தார் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், பாப்பா சுந்தரத்தை காப்பாற்றுவதிலேயே குளித்தலை போலீசார் கவனம் காட்டினர். எம்எல்ஏ மீது புகார் கொடுத்த மீனாட்சியின்கணவரையே டார்ச்சர் செய்தனர்.
இதையடுத்து மீனாட்சியைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீனாட்சியின் கணவர் ஆள்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாத்த உயர்நீதிமன்றக் கிளை, வழக்கை குளித்தலை காவல்துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தவழக்கில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய 2 முறை காலக்கெடுவையும் நீட்டித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.
வருகிற 27ம் தேதி இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஐடி போலீசாரும்தன்னையே தொல்லைப்படுத்துவதாகவும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும் மீனாட்சியின் கணவர் குற்றம் சாட்டி வந்தார்.
கடத்தப்பட்ட மீனாட்சி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிபிசிஐடி போலீஸாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.மீனாட்சி கடத்தப்பட்டதாக கூறப்படும் கார் குறித்தும், மீனாட்சி கொலை செய்யப்பட்டதற்கான சில ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகசிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், வரும் 27ம் தேதி தங்களிடம் உள்ள முழு விவரங்களையும்இறுதி விசாரணை அறிக்கையில் தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.