ஃப்ரிட்ஜ் வாங்க வாக்காளர்களுக்கு கூப்பன் கொடுத்த விஜயபாஸ்கர்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!
சென்னை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு 'ஃப்ரிட்ஜ்' வாங்க கூப்பன் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சி.விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இதில் 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சி.விஜயபாஸ்கர். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோல்வியுற்ற கே.கே.செல்லப்பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறி 10,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய்க்கான கூப்பன்களை வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு 'ஃப்ரிட்ஜ்' வழங்க கூப்பன் விநியோகித்து சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். எனவே விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்து விட்டு, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வழக்கு காரணமாக விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications