தண்டனை வழங்குவதில் தமிழகம் சாதனை: ஜெ
சென்னை:
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தமிழக காவல் துறை சாதனை படைத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நிம்மதிக்கும் அடிப்படையாக இருப்பது அமைதியானசூழ்நிலையே ஆகும். அத்தகைய அமைதியான சூழலை உருவாக்கிட அடித்தளமாக அமைவது காவல் துறைப் பணியே. எனவே தான் எனது தலைமையிலான அரசுகாவல்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட 17 நாட்களுக்குள் ஒரு கொலை வழக்கிலும், 16 நாட்களுக்குள் மற்றொரு கொலை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து தமிழ்நாடு காவல் துறை சாதனை படைத்துள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும், குற்றம் செய்தவர்கள் அதற்குரியதண்டனையை விரைந்து பெற்றிட வேண்டும் என்பது தான் எனது அரசின் எண்ணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு:
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமத்தில் உள்ள கடற்படை விமானதளத்தை மேம்படுத்துவதற்காக விமான தள ஓடுபாதையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மற்றும் பனை மரங்களை வெட்டவேண்டும் என்று விமானதள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவில் மரங்களை வெட்டுவதால் அதனை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். இவை யாவும் முழுவதுமாக வளர்ந்த மரங்கள்என்பதால் வழக்கமாக கொடுக்கப்படும் நஷ்ட ஈடு இந்த சூழ்நிலையில் பொருந்தாது. வழக்கமான நஷ்ட ஈட்டுடன் சிறப்பு கருணைத் தொகையும் அவர்களுக்குவழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.