அயோத்தி தாக்குதல்: இந்தியா, பாக். உறவு பாதிக்கும்- மன்மோகன் சிங்
லண்டன்:
அயோத்தியில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால், பாகிஸ்தானுடனான அமைதிநடவடிக்கைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
இங்கிலாந்தில் நடக்கும் ஜி 8 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று புறப்பட்டுசென்றார். நேற்றிரவு அவர் லண்டன் சென்றடைந்தார். விமானத்தில் வைத்து அயோத்தியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்குறித்து நிருபர்களிடம் பிரதமர் கூறுகையில்,
அயோத்தி ராமர் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டது மிகப் பெரிய சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால்,பாகிஸ்தானுடனான அமைதி நடவடிக்கை பாதிக்க வாய்ப்புள்ளது. அமைதி நடவடிக்கையை வெற்றிகரமாக்க, இந்தியமக்களின் பொது கருத்தும் அவசியம் என்று நான் கூறி வருகிறேன்.
இந்த பொது கருத்துக்கு இடையே அயோத்தி தாக்குதல் போன்ற சம்பவங்கள் ஏதாவது வந்தால், அமைதி நடவடிக்கையை அதுபாதிக்கும்.
பாகிஸ்தானில் தீவிரவாத கட்டமைப்புகள் இன்னும் அப்படியே உள்ளன. அமைதி நடவடிக்கை வெற்றி பெற வேண்டும்என்றால், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்துவதாக கூறிய உறுதிமொழியை பாகிஸ்தான் காப்பாற்ற வேண்டும்.
அயோத்தி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதற்கான புலனாய்வு ஆதாரங்கள் உள்ளன.இந்தியா, பாகிஸ்தான் அமைதி நடவடிக்கை தொடரக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கக்கூடும். இந்த சம்பவம் பற்றி பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் நான் பேசவில்லை என்றார்.