வரதட்சணை புகார்கள்: காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை!
சென்னை:
வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களை காவல்துறையினர் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ராமமூர்த்தியின் மருமகள் வரலட்சுமி,திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.இந்த மனுவைப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இந் நிலையில் ராமமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வரதட்சணைக்கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க காவல்துறைக்கு உரிமை இல்லை.
சமூக நலத்துறைதான் இத்தகைய வழக்குகளை விசாரிக்க முடியும். விசாரணையின் முடிவில், கடைசிக் கட்டமாக,தேவைப்பட்டால்தான் காவல்துறை இதில் தலையிட முடியும். எனவே எனது குடும்பத்தார் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி குலசேகரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அதை விசாரணைக்கு ஏற்றனர். மேலும், வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களைகாவல்துறையினர் விசாரிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், திருவல்லிக்கேணி காவல்நிலைய இன்ஸ்பெக்டர், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications