கேரள கூட்டணி: ஜெவுடன் பேச வரும் முரளீதரன்
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் விவாதிக்க கேரள மாஜி முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரன், சென்னைக்கு வரவுள்ளார்.
சோனியாவை எதிர்த்தால் ஓரங்கட்டப்பட்ட கருணாகரன் கேரளத்தில் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். அக் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது.அதேபோல தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவரான திண்டிவனம் ராமமூர்த்தியை வெளியில் இழுத்து, அவரை ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக்க கருணாகரனும் ஜெயலலிதாவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதே போல பாண்டிச்சேரியில் ப.கண்ணனின் கட்சியுடன் அதிமுக-ஜனநாயக இந்திரா காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைக்கின்றன. இதன்மூலம் காங்கிரஸ் தலைமைக்கு டென்சன் தரும் வேலைகளில் ஜெயலலிதாவும் கருணாகரனும் ஈடுபட்டுள்ளனர்.
கேரளத்தில் காங்கிரசுக்கு வரும் தேர்தலில் பெரும் தோல்வி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அங்கு இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஆனாலும் காங்கிரசின் தோல்விக்கு கருணாகரனுடன் தானும் மிக முக்கியக் காரணம் என்ற பிரமையை ஏற்படுத்தும் வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
இந் நிலையில் திண்டிவனம் மூலம் காங்கிரஸ் உடைப்பு வேலைகளையும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேசவும் கருணாகரனின் மகனும், ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முரளீதரன் சென்னை வருகிறார்.
சனிக்கிழமை அவர் சென்னை வந்து ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக இறுதி வடிவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதையடுத்து ஜெயலலிதா கேரளா சென்று கருணாகரனை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
கூட்டணி முடிவானவுடன், கேரளாவில் தமிழகர்கள் அதிகமுள்ள தொகுதிகள் சில அதிமுகவுக்கும், தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் சில கருணாகரனின் கட்சிக்கும் அளிக்கப்படும்.
மேலும் கேரளாவில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு பிரசாரம் செய்யக் கூடும் எனவும் தெரிகிறது.
ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபட்டால் அது தனது கட்சிக்கு மிகப் பெரும் பலமாக அமையும் என கருணாகரன் நம்புகிறார். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுடன் அவர் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
முரளீதரன் தனது சென்னை பயணத்தின்போது திண்டிவனம் ராமமூர்த்தியையும், ப.கண்ணனையும் சந்தித்துப் பேசவுள்ளார்.