காஃபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை!
சென்னை:தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒரு காலத்தில் காஃபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காஃபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்புமண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதிஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அணு ஆய்வு மையத்தின்,பயோ மெடிக்கல் பிரிவின் முன்னாள் இயக்குநரும், பிரபல கதிரியிக்க ஆய்வாளருமான பி.சி.கேசவன் இதைத் தெரிவித்துள்ளார்.
தற்போது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் கேசவன் இதுகுறித்துக் கூறுகையில், காஃபியில் உள்ள காஃபின், புற்றுநோய், சர்க்கரை வியாதி-2, இதய நோய், பர்கின்ஸன் நோய், வயிற்றில் கல் ஏற்படுவது ஆகியவற்றை அறவே குறைப்பதாக கூறுகிறார்.
இதுதொடர்பாக கடந்த 6 முதல் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
காஃபின் தவிர பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், குளோரோஜெனிக் அணிலம் மற்றும் பினோலிக் கூட்டுப் பொருள் ஆகியவை நமதுஉடம்பில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறதாம்.
தற்போதைய காலகட்டத்தில் மன அழுத்தம் படு சாதாரணமான விஷயமாகி விட்டது. இந்த நிலையில் அடிக்கடி காஃபி சாப்பிடுவது சகஜமாகிவிட்டது. ஆனால் இது நல்ல பழக்கம்தான், நல்ல சுத்தமான காஃபியை சாப்பிட்டு வந்தால் புத்துணர்ச்சி மட்டுமல்ல, உடலுக்கும் ஆரோக்கியம்என்கிறார் கேசவன்.












Click it and Unblock the Notifications