பொதுமக்கள் பார்வைக்கு நபிகள் நாயகத்தின் புனித முடி
திருச்சிநபிகள் நாயகத்தின் 1402 ஆண்டு பழமை வாய்ந்த புனித முடி, திருச்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நபிகள் நாயகத்தின் 1402 ஆண்டு பழமை வாய்ந்த தலைமுடி, திருச்சியில் உள்ள முகம்மதியா ஜாமியா மசூதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை, நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மிலாடி நபி அன்று இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன்படி மிலாடி நபி தினமான நேற்று புனித முடி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்து தரிசித்தனர்.
இதுகுறித்து மசூதியின் இமாம் ஹஸ்ரத் சையத் தஸ்தகீர் கத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புனித முடியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு நிழலே கிடையாது. எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் இதன் நிழல் எதிலும் விழாது என்றார்.
நபிகள் நாயகத்தின் புனித முடி, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பெட்டியின் உள்பகுதியில் மெழுகு வைக்கப்பட்டு அதில் புனித முடியை வைத்துள்ளனர். மெழுகு அடங்கிய இந்தப் பெட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட கோப்பையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முகம்மதியா ஜாமியா மசூதி 255 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications