முதலில் பொது மாணவர் சேர்க்கை;ஓபிசி மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு!
டெல்லி:ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பொது மற்றும் எஸ்.சி., எஸ்.டி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்துவது, பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் சேர்க்கையை உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் மேற்கொள்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று மாலை இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரித் தலைவர்கள் ஆலோனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டைப் போலவே இப்போது மாணவர் சேர்க்கையை நடத்துவது (அதாவது பொது மற்றும் எஸ்.சி, எஸ்.டி மாணவர் சேர்க்கை), உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்த ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு திமுக சார்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பாமக சார்பில் கலந்து கொண்ட அன்புமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த யோசனையை தங்களது கட்சிகள் அடிப்படையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் அரசுத் தரப்பில் இந்தத் திட்டத்தை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகளுக்கும், இடது சாரிக் கட்சிகளுக்கும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து ஆட்சேபனையுடன் இதை ஏற்பதாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் தெரிவித்தன.
அனைத்துக் கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications