சொத்துக் குவிப்பு: விடுவிக்கப்படும் திமுகவினர்-அப்பீல் செய்யாதது ஏன்?-அதிமுக கேள்வி
சென்னை:சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய அமைச்சர்கள், திமுகவினர் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பாக மேல் முறையாடு செய்யாமல் இருப்பது ஏன் என்பதை 7 நாட்களுக்குள் விளக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தை அதிமுக கேட்டுள்ளது.
அதிமுக எம்.பி. ஜோதி இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திற்குச் சென்று ஒரு மனுவைக் கொடுத்தார். அதில் அதிமுகவைச் சேர்ந்த 12 ராஜ்யசபா உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அமைச்சர்கள், பொது நல ஊழியர்கள் வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தால் அவர்கள் மீது வழக்கு தொடரும் சிறப்புப் பொறுப்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்திற்கு உள்ளது.
1996ல் அப்போதைய முன்னாள் முதல்வர், அமைச்சரவை, அமைச்சர்கள் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரிக்க உங்களது அலுவலகம் அதீத ஆர்வம் காட்டியது.
அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய திமுக அமைச்சர்கள், திமுகவினர் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகளை உங்களது அலுவலகம் கையாண்ட விதம் சட்ட நலனுக்கு விரோதமாக உள்ளது.
அரசு வக்கீல்களாக திமுகவினர்தான் உள்ளனர். இந்த நிலையில், நடுநிலையான அரசு வக்கீல்களை ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்ககம் ஏன் நியமிக்கவில்லை.
மேலும் ஒரு குறிப்பிட்ட நீதிபதி மட்டுமே இந்த வழக்குகளை விசாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது ஏன். சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி விடுவிக்கப்பட்ட திமுகவினருக்கு எதிராக சிறப்பு மனுக்கள், மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்யாதது ஏன்.
அதிமுகவினர் மீதான சிறிய வழக்குகளுக்கும் கூட லட்சக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதின்றத்திலும் வாதிடப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தில் ஏராளமான திமுகவினர் விடுவிக்கப்பட்டது குறித்து மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்க அதிமுகவினரை அனுமதிக்க வேண்டும். ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பதை 7 நாட்களுக்குள் விளக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பவும், உச்சநீதிமன்றம் கொண்டு செல்லவும் இந்த விளக்கம் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications