தினகரன் தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவருடன், இவர்களையும் சேர்த்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று தினகரன், சன் டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீஸார் நேற்று இரவு டைகர் பாண்டி (27), பாட்ஷா (40) ஆகியோரைக் கைது செய்தனர். இன்று அதிகாலை சரவணன் (27), பிரபு (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நான்கு பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முன்னதாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் தினகரன் நாளிதழ் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில், மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், அவரது கணவர் கோபிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, மண்டலத் தலைவர் மாணிக்கம், முன்னாள் திமுக தொண்டர் அணி செயலாளர் சரவணன், கவுன்சிலர் அருண்குமார், பொன் சேதுராமலிங்கம், சிங்கத்தேவன், அவரது மகன் ராஜா, அட்டாக் பாண்டி, பீபிகுளம் குட்டை ரவி, பெயிண்டர் முத்துராமன், மாயா உள்ளிட்டோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இதில் நான்கு பேரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலும் அழகிரி பெயர் இடம் பெறவில்லை.செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய கொலை வெறித் தாண்டவத்திற்குப் பின்னர் இன்று மதுரையில் பொதுவாக அமைதி நிலவுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.