வங்கதேச தொடரை வென்றது இந்தியா
டாக்கா:டாக்காவில் நடந்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக 49 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது.
வழக்கம் போல ஷேவாக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கெளதம் காம்பீர் சிறப்பாக ஆடி 101 ரன்களைக் குவித்தார். கேப்டன் ராகுல் டிராவிட் மிகவும் நிதானமாக ஆடி 42 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
49 ஓவர்கள் முடிவில், எட்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 284 ரன்களைக் குவித்தது. ரபீக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வங்கதேசம் நிதானமாக ஆடி வெற்றி இலக்கைத் தொட முயற்சித்தது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், வங்கதேசம் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.
இறுதியில், 49 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்புக்கு 238 ரன்களில் ஆட்டமிழந்தது வங்கதேசம். கேப்டன் ஹபிபுல் பாஷர் 43 ரன்கள் எடுத்தார். மொர்டசா 42 ரன்கள் சேர்த்தார்.
இளம் சுழற் பந்து வீச்சாளர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜாகிர் கானுக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றோடு, தொடரையும் வென்றுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த படு தோல்விக்குப் பின்னர் இந்தியா கலந்து கொண்ட முதல் ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.