சென்னை அருகே ரூ.3,750 கோடியில்ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலம்
சென்னை : சென்னை அருகே ரூ. 3750 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுடன் கூடிய சிறப்பு பொருளாதார மையத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
துபாயைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்த ஈடிஏ ஸ்டார் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தவுள்ளன.
ரூ.3750 கோடியில் உருவாகும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நகரியம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.
இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஈடிஏ அஸ்கான் குழும தலைவர் சையத் சலாஹுதீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இத்திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். மொத்தம் 175.30 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமையும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வரிசை வீடுகள், பங்களாக்கள், வணிக வளாகங்கள், கார் நிறுத்தங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், ஹோட்டல்கள், உள்ளிட்டவை இடம் பெறும்.
50 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் அமைகிறது. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை அரசு வாங்கிக் கொடுக்காது. மாறாக ஈடிஏ நிறுவனமே விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.