விடாத விஜய்.. இளையராஜாவிடம் ரகசிய டீலிங்! மதுரை புள்ளிகளை வளைத்த போலீஸ்! சீனுக்குள் வந்த ’டெல்லி’.!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் சூழல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இடைத்தேர்தல் , கட்சி தாவல் என பரபரப்பாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ ஒருவரிடம் நேரடியாக பேரம் பேசியதாகக் கூறப்படும் புகார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்புகொண்டதாக கூறியிருந்தார்.
தவெக
ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் பலரைக் கைது செய்துள்ளனர். முதன்முதலாக கைது செய்யப்பட்ட நாகராஜ், தியாகராஜ் மற்றும் நரேஷ் ஆகிய மூவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் மூலமாகத்தான் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜா எம்எல்ஏ
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.வை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைப்பதற்காக உயர்பதவியும், ரூ.35 கோடி வரையிலான பணமும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலையை கண்டறிய காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது. மேலும், இது தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி
எனவே செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். எனவே, அவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்களிடம் ஹவாலா முறை மூலம் பணம் கைமாற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
அமலாக்கத் துறை
இதனையடுத்து மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத் துறையும் விசாரணையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் சோதனையும், கைது நடவடிக்கையும் எடுக்கலாம் என எதிர்பார்ப்பதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீஸ்
மதுரையைச் சேர்ந்த கணேசன், ரகு பிரகாஷ், சாமியப்பன் ஆகிய மூன்று பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரம் பேசுவதற்கு இடைத்தரகர்கள் போல இவர்கள் செயல்பட்டு இருக்கலாம் எனவும், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் இவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவர்களை சென்னை அழைத்துச் சென்று விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications