கட்டாய ஹெல்மட் உத்தரவுக்கு தடை இல்லை!
சென்னை:இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெலமட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகரங்களிலும் ஜூன் 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் பிற பகுதிகளில் ஹெல்மட் கட்டாயமாகிறது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவில், சளி பிடித்தவர்கள், கண்ணாடி போடுபவர்கள், பல் வலி, முக வலி உள்ளவர்கள், பாதிரியார்கள், சாமியார்கள், பண்டிட்டுகள், இஸ்லாமிய குருக்கள், டர்பன் அணியும் சீக்கியர்கள், தொப்பி, குல்லா வைப்தை பாரம்பரியமாக கொண்டவர்கள், தலையில் காயம் அடைந்தவர்கள், கழுத்து வலி உள்ளவர்கள், வழியில் லிப்ட் கேட்பவர்கள் உள்ளிட்ட சில வகையினருக்கு இந்த ஹெல்மட் அணியும் உத்தரவிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும்.
அதேபோல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கும் ஹெல்மட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அதேபோல பெண்கள் வெளியில் செல்லும் போது பூ, கொண்டை, ஹேர்பின், நகைகள் உள்ளிட்டவற்றுடன்தான் செல்வர். அதிலும் விழாக்கள், கல்யாணம் ஆகியவற்றின்போது அதிக அலங்காரத்துடன் செல்வது வழக்கம். அப்படிப்பட்ட நிலையில் பெண்கள் ஹெல்மட் அணிவது அசவுகரியமாக இருக்கும்.
எனவே பெண்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வகையினருக்கு ஹெல்மட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த விடுமுறைக்கால நீதிபதிகள் ஜோதிமணி, சுதாகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசு கொள்கை ரீதியாக எடுத்த முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.