செப். 14 முதல் சேலம் ரயில் கோட்டம்கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
சென்னை:சேலம் ரயில்வே கோட்டத்தை செப்டம்பர் 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். ஒரு நாள் முன்னதாகவே தொடக்க விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் மட்டுமே ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் மேற்குப் பகுதி மாவட்டங்களை இணைத்து, பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து அவற்றைப் பிரித்து தனியாக சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகளில், தமிழகத்தின் ஆதிக்கம் குறைவாக இருந்த காரணத்தால் சேலம் ரயிலவே கோட்டம் அமைவது கனவாக இருந்து வந்தது.
இந்த நிலையில் திமுக கூட்டணி மத்திய அரசில் மிகுந்த செல்வாக்குடன் உள்ள தற்போதைய நிலையில், சேலம் ரயில்வே கோட்டக் கனவு நனவாகியுள்ளது.
கேரளாவின் கடும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு சதிகளை மீறி சேலம் ரயில்வே கோட்டம் உருவாகியுள்ளது. இந்தக் கோட்டத்தின் கீழ் கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 843 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதை பகுதிகள் சேலம் கோட்டத்தின் கீழ் வருகின்றன.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி ரயில்வே கோட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது செப்டம்பர் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 14ம் தேதிக்கு தொடக்க விழா முன்கூட்டியே நடக்கவுள்ளது.
முதல்வர் கருணாநிதி சேலம் ரயில் கோட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. சேலம் ரயில் நிலையத்தைப் புதுப்பித்து அலங்கரிக்கும் வேலையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
சேலம் ரயில் கோட்டம் செயல்பாட்டுக்கு வருவதைத் தொடர்ந்து தமிழகத்தின் மேற்குப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நனவாகிறது, அவர்கள் பாலக்காடு கோட்டத்தின் கீழ் இதுவரை சந்தித்து வந்த பல்வேறு சங்கடங்கள், சஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications