தாதாவுடன் கூட்டணியா?- கேஸ் போடுவேன்-கருணாநிதிக்கு ஜெ மிரட்டல்
சென்னை:தாதாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு டாடா திட்டத்தை எதிர்க்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி மீது கிரிமினல் வழக்குத் தொடரப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிக்கையில்,
சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.
இதையடுத்து கருணாநிதி எனது கருத்துக்களுக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கார்னர் என்ற கனிமத்தை திருட்டுத்தனமான எடுத்து, சட்ட விரோதமாக, தேச நலனுக்கு பாதகமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் தொழில் செய்யும் ஒரு தாதாவுடன் (ஜெயா டிவி பங்குதாரர் வைகுண்டராஜன்)ஜெயலலிதா செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தமே டாடா திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கக் காரணம்.
ஜெயாவின் குடும்ப டிவியில் அந்த தாதா ஒரு பங்குதாரர், பிறகென்ன கேட்க வேண்டுமா. அந்த தாதாவை கைத்தடியாக ைவத்துக் கொண்டு, அவர் குவிக்கும் பணத்தில் தான் அந்த வட்டாரத்தில் சிலர் கும்மாளம் போடுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் கருணாநிதி.
இல்லாத, பொல்லாத கற்பனைகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளை அறிக்கை என்ற பெயரில் கூறியிருக்கிறார். டாடா திட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும், ஏன் அவரது கட்சியினருமே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
ஆனால், எனக்குத் தெரிந்த ஒருவரை காப்பாற்றவே பேராட்டத்தை அறிவித்தேன் என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.
அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மேற்படி கனிம வளம் மேஜர் மினரல் என்று சொல்லப்படும் இனத்தை சார்த்தது. அது மத்திய கனிம வளத்துறையின் சட்ட திட்டங்களின் கீழ் வருகிறது.
அப்படியிருக்கையில் யாரோ ஒருவர் சட்ட விரோதமாக அந்த கனிமத்தை எடுக்கிறார், அதற்கு நான் உடந்தையாக இருக்கிறேன், அவரைக் காப்பாற்றவே போராட்டத்தை அறிவித்துள்ளேன் என்று சொல்வது மக்களுக்காக பேராட்டம் அறிவிக்கும் என்னைப் போன்றவர்களைக் கண்டால் ஏற்படும் எரிச்சல் தான் காரணமாக இருக்கும்.
எனது கைத்தடி என்றும், அவருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருக்கிறேன் என்றும் அவதூறாக எழுதியிருக்கிறார். இதற்காக கருணாநிதி மீது நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications