கோழிப் பண்ணையில் 17,500 லிட்டர் எரிசாராயம்:4 கேரள ஆசாமிகள் கைது-மதிப்பு ரூ. 40 லட்சம்!
திருநெல்வேலி:கேரளாவுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 17 ஆயிரத்து 500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் வழியாக பல்வேறு மாநிலங்களிலிருந்து எரிசாராயம் கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லைகளான நாகர்கோவில், புளியரை ஆகிய பகுதிகளில் இந்த கடத்தலை தடுப்பதற்காக மது விலக்கு போலீசார் தனி சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குறிச்சாம்பட்டி என்ற குக்கிராமத்தில் கோழிப்பண்ணையில் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் உத்திரவுப்படி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் கூட்டாக அந்த கோழிப்பண்ணையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 500 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயம் சிக்கியது. கேரளாவுக்கு கடத்துவதற்காக இந்த எரிசாராயம் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த பிஜு என்கிற சசி, சசிக்குமார், கொட்டாரக்காராவைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பிரசாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்சார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கோழிப்பண்ணை உரிமையாளர் தங்கத்துரை தலைமறைவாகி விட்டார்.
பெங்களூரிலிருந்து இங்கு எரி சாராயத்தைக் கொண்டு வந்து பின்னர் கன்னியாகுமரி வழியாக இவர்கள் கேரளாவுக்கு கடத்தி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த எரி சாராயக் கடத்தல் நடந்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களிடம் ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications