அரசு அலுவலகங்களில் குடியேறும் மார்க்சிஸ்ட்போராட்டம் வாபஸ்-கருணாநிதி கோரிக்கை ஏற்பு
சென்னை:வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி அரசு அலுவலகங்களில் குடியேறி போராட்டம் நடத்தும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தி இன்று அரசு அலுவலங்களில் குடியேறி போராட்டம் நடத்தப்படும் என அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி முதல்வர் கருணாநிதி விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் இப்போராட்டம் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடும் என்ற ஐயப்பாட்டை அவர் தெரிவித்திருந்தார். மேலும் போராட்டத்தை வாபஸ் பெறுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தப் போராட்டம் சட்டப்பூர்வமாகவும், வன்முறைகள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு இடமில்லாத வகையிலும் நடைபெறும் என்பது சம்பந்தப்பட்ட சங்கங்கள் சார்பில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து விவசாய சங்கப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தனது அறிக்கையிலேயே அங்கீகரித்துள்ளதை முதல்வரின் அறிக்கை வாசகங்களே பதிவு செய்துள்ளது.
எனினும் கூடுதலாக 10 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வரை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை எடுத்துக் காட்டி அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொகாள்ள வலியுறுத்தியே இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வரின் கோரிக்கையைத் தொடர்ந்து இதுகுறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்களோடு வருகிற 15ம் தேதி அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இன்று நடைபெறுவதாக இருந்த அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை, ஆர்ப்பாட்டம் என்ற அளவில் மாற்றி விவசாய சங்கத் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார் வரதராஜன்.
கருணாநிதி கோரிக்கை
முன்னதாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பாக விரிவாக விவரித்திருந்தார். அதில், கடந்த அதிமுக ஆட்சி, முந்தைய திமுக ஆட்சி, தற்போதைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டு மனைப் பட்டாக்கள் குறித்தும் அவர் புள்ளி விவரங்களை எடுத்துரைத்திருந்தார்.
இதைக் கருத்தில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications