திமுக டிரைவர், கண்டக்டர்கள் பேரணி:பஸ்கள் திடீர் நிறுத்தம்- பரிதவித்த பயணிகள்
சென்னை:போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த காலத்தை குறைக்கக் கோரி திமுகவின் தொழிலாளர் முன்னேற்றக் சங்கத்தின் (தொ.மு.ச) சார்பில் சென்னையில் இன்று கோரிக்கை பேரணி நடந்தது.
சென்னையில் தொ.மு.ச. தலைவரும் எம்பியுமான குப்புசாமி தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்ற பெரும் எண்ணிக்கையில் டிரைவர், கண்டக்டர்கள் சென்றிவிட்டதால் மாநிலம் முழுவதும் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அவை டெப்போக்களிலேயே நின்றிருந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் மொத்தம் 2,600 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் 500 பேருந்துகளை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் இல்லை. இதனால் அவை இயக்கப்படவில்லை.
வழக்கமான நேரத்தில் பஸ்கள் வராததால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் அவை நிரம்பி வழிந்தன. பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து ஆட்டோக்களுக்கும் டாக்சிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டது. இது தான் சமயம் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் இரு மடங்கு கட்டணம் கேட்டு பயணிகளை மேலும் நோகடித்தனர்.












Click it and Unblock the Notifications