ஜெயேந்திரரின் பக்தன் நான் - வழக்கைவிசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!
டெல்லி:நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.
இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.
இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications