டாடா தொழிற்சாலைக்கு மக்கள் ஆதரவுதர வேண்டும்- கருணாநிதி கோரிக்கை
சென்னை: டாடா தொழிற்சாலை அமைவதற்கு நெல்லை, தூத்துக்குடி மக்கள் முழு ஆதரவு தெரிவிப்பார்கள், வரவேற்பார்கள் என்று நம்புவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 1996-2001ம் ஆண்டு திமுக அரசு இருந்தபோது, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சீத்தாராமதாஸ் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து, தென் மாவட்டங்களின் வறண்ட தன்மையினைப் போக்கி வளம் ஏற்படுத்த, அவர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையில், அந்த மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இந்த அரசு சில திட்டங்களை செயல்படுத்தியது.
மதுரையில் சிப்காட் தொழில் வளாகம், டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, விருதுநகரில் ஏற்றுமதி தொழில் மையம், நெல்லையில் நாங்குநேரி, குளச்சல் துறைமுகம் ஆகிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்திட முனைந்திருக்கிறது.
இதன் ஒரு கட்டமாகத்தான் சாத்தான்குளம் பகுதியில் இல்மனைட் என்ற கனிமத்திற்கு மதிப்பூட்டி, பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலையை நிறுவிட டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கணிம வளங்கள் நிறைந்துள்ளன.
இவற்றை பயன்படுத்திக் கொள்ள இப்போதுதான் முதல் முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் போலவும், அதற்காகவே டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதைப் போலவும், இந்த முயற்சி நிறைவேறுமானால் சாத்தான்குளம், பகுதி பாலைவனமாகி விடும் என்பதைப் போலவும் ஒரு சிலர் உள்நோக்கத்துடன் மக்களை திசை திருப்பும் வகையில், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 3 மாவட்டங்களிலும் இல்மனைட், கார்னெட், ரூட்டைல், சில்மனைட், சிர்கான் போன்ற கனிம வளங்கள் உள்ளன. இவற்றைப் பிரித்தெடுப்பதற்கான சுரங்கத் தொழில் கடந்த 39 ஆண்டுளாகவே நடந்து கொண்டு கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இப்பகுதியில் வி.வி.மினரல்ஸ் (வைகுண்டராஜன் கம்பெனி), பீச் மினரல் சாண்ட் கம்பெனி உள்ளிட்ட 59 நிறுவனங்களுக்கு மணலைப் பிரித்தெடுக்கும் குத்தகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது டாடா நிறுவனம் தனது நிறுவனத்தை இங்கு அமைக்குமானால் அது இந்த நிறுவனங்களில் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர அந்த நிறுவனம்தான் முதன் முதலில் கனிமத்தைப் பிரித்தெடுக்கப் போகிறது என்று கூறுவதில் உண்மை கிடையாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 460 வருவாய் கிராமங்களில் 7 கிராமங்களை மட்டுமே உள்ளடக்கி இந்த டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனம் அமைக்கப்படும்.
இங்கு கையகப்படுத்தப்படும் நிலம் மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர்தான். இதில் விவசாயம் நடந்து ெகாண்டிருப்பது 345 ஏக்கர் மட்டுமே.
இந்த பகுதிகளில் கனிமங்களைப் பிரித்தெடுப்பதால் அப்பகுதி பாலைவனமாகி விடும் என்று கூறுவதில் எள்ளளவும் அறிவியல் உண்மை கிடையாது.
ஆனால், சில அரசியல் கட்சிகள் இத்திட்டத்தை வரவிடாமல் தடுப்பதற்கு பல வழிகளை கையாண்டு வருகின்றன.
நெல்லை, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி தனியாருக்கு சொற்ப விலைக்கு கொடுக்கிறார்கள் என்றெல்லாம் மக்களை தூண்டி விட்டுள்ளார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக நின்று போன இந்தத் திட்டத்தை, தனியாக முன்னின்று செயல்படுத்தியுள்ளது. இதை பொறுக்காத சிலர் தூண்டிவிட்டு இத்திட்டத்தை தடுப்பது வேதனையை தருகின்றது.
எதிர்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திட்டத்தை குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க உயர்மட்ட குழுவை அனுப்பவுள்ளோம். அப்பகுதி மக்களின் ஆதரவை பெறுவதற்காக நாங்கள் எந்தவொரு தவறான தகவல்களையும், ஆசை வார்த்தைகளையும் கூற மாட்டோம்.
எனவே, உண்மை நிலையைப் புரிந்து கொண்டு, அந்தப் பகுதி மக்கள் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை வருவதற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாவதற்கும் எந்தவிதமான இடைஞ்சலும் செய்ய முன்வராமல், இதனை வரவேற்பார்கள் என்று நம்புவதோடு,
அரசு சார்பில் அனுப்பப்படும் குழுவினரிடம் இந்தத் திட்டம் நல்ல முறையில் நிறைவேற்றி மக்களுக்குப் பயன்படும் வகையில், அமைந்திட, விருப்பு வெறுப்பின்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திடுமாறும் கோருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications