ஆபேரஷனில் பெண் சாவு-மீண்டும் சர்ச்சையில்மதுரை டாக்டர் தம்பதி!
மதுரை:சிகிச்சையின்போது சிறுவன் இறந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கிய மதுரை டாக்டர் தம்பதியின் மருத்துவமனையில் மீண்டும் ஒரு பெண் சிகிச்சையின்போது உயிரிழந்தார்.
இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மதுரை நரிமேட்டில் உள்ள சிவா பாலி கிளினிக். டாக்டர் சிவகுருநாதனும், அவரது மனைவி டாக்டர் விஜயலட்சுமியும் இந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் என்ற சிறுவன் சிகிச்சையின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டான். உடனடியாக அவவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் இறந்து விட்டான்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் டாக்டர் தம்பதியை போலீஸார் கைது செய்தனர். இது மதுரை டாக்டர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் இந்த சர்ச்சை அடங்கியது.
இந் நிலையில் டாக்டர்கள் சிவகுருநாதனும், விஜயலட்சுமியும் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள சால்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன் என்பவரின் மனைவி மீனா. 35 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது
கடந்த 6ம் தேதி மீனாவை சிவகுருநாதன் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அதில், மீனாவின் கர்ப்பப் பையில் கட்டி இருப்பதாகவும், அதை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் சிவகுருநாதன் கூறியுள்ளார்.
இதையடுத்து மீனா நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாலை 3 மணிக்கு அவருக்கு டாக்டர் விஜயலட்சுமி மயக்க ஊசி போட்டார். பின்னர் ஆபரேஷன் தியேட்டருக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
ஆபரேஷன் முடிந்து, வார்டுக்கு கொண்டு வரப்பட்ட மீனா மயக்கம் தெளியாத நிலையில் இருந்தார். அரை மணி நேரத்தில் அவர் கண் விழிப்பார் என்று டாக்டர் சிவகுருநாதன், வெள்ளையப்பனிடம் கூறினார். ஆனால் நெடுநேரமாகியும் மீனா கண்விழிக்கவில்லை.
இதையடுத்து நர்சிடம் கூறினார் வெள்ளையப்பன். நர்ஸும் ஓடி வந்து பார்த்து விட்டு சிவகுருநாதனிடம் கூறினார். மீனாவை சோதித்த சிவகுருநாதன், அவரை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
அங்கு கொண்டு சென்றபோது, மீனா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்டு வெள்ளையப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் டாக்டர் தம்பதி மீது புகார் கொடுத்தார். மேலும் தகவல் அறிந்ததும் வெள்ளையப்பனின் உறவினர்கள், சால்வார்பட்டி கிராமத்து ஆட்கள் திரண்டு வந்து விட்டனர்.
அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராடடத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை டாக்டர் தம்பதியின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2வது நோயாளி இறந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications