சாராயம் குடிப்பவர் பாமகவில் இருக்கக்கூடாது-ராமதாஸ்
சிதம்பரம்:சாராயம் குடிப்பவர்கள் எவரும் பாமகவில் இருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது,
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். உணர்வுகளை கட்டுப்படுத்தினால் பதட்டம் தானாக குறைந்துவிடும். தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்பட்டபோது நான் தான் சென்று ஒற்றுமையை உண்டாக்கினேன்.
கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்திற்காக (பாமக, வி.சிக்கள் மோதல்), திருமாவளவனும், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏவும் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. இது போன்ற இணக்கமான சூழ்நிலை உருவானால் கலவரங்கள் ஏற்படாது.
பாமகவினர் விட்டுக் கொடுப்பவர்கள் என்ற நிலையை உருவாக்கினால் தான் ஆத்திரம் அடங்கி அன்பு என்ற உணர்வு மேலோங்கும். அதேபோல் தலித்துகளும், வன்னியர்களும் தண்டவாளங்களை போல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
ஆடுகள் மோதிக் கொள்ளட்டும் என்று ஓநாய்கள் முயற்சி செய்யும். யார் தவறு செய்தாலும் காவல்துறை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமகவினர் சாலை மறியல் செய்யக்கூடாது. தேவைப்பட்டால் முக்கிய பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகங்களின் முன்பு அமைதியாக போராட்டம் நடத்தலாம்.
பாமகவினர் எவரும் சாராயம் குடித்துவிட்டு வன்முறை, போராட்டங்களில் இறங்கக்கூடாது. சாராயம் குடிப்பவர்கள் எவரும் பாமகவில் இருக்கக் கூடாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications