டாடா: சாத்தான்குளத்தில் பாமக கருத்துக் கேட்பு
சாத்தான்குளம்:
டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை பிரச்சினை தொடர்பாக சாத்தான்குளம் பகுதியில், பாமக சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
பாமக மாநில துணைப் பொது செயலாளர் உஜ்ஜல்சிங், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் சாத்தான்குளம் பகுதி கிராமங்களான தச்சமொழி, புதுக்குளம், அரசூர், நடவக்குறிச்சி மற்றும் சாஸ்தாவிநல்லூர் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் டாடா ஆலை குறித்து கருத்து கேட்டனர்.
அப்போது கிராம மக்கள் அவர்களிடம் கூறுகையில், சென்னை, கோவை, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் வடநாடுகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள், சில்லரை வணிகத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் சிறு வணிகம் செய்து வந்த இப்பகுதி நாடார் மக்களின் தொழில் பெருமளவு முடங்கி விட்டது. சொந்த ஊரில் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என்றால் டாடா ஆலைக்கு விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கிறது.
இங்குள்ள மணலில் இருந்து கனிம வளங்களை பிரித்து எடுத்தபின் இங்கு யாரும் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே எந்த சூழ்நிலையிலும் எங்களது விவசாய நிலங்களை விட்டுத் தர மாட்டோம் என உறுதியுடன் கூறினர்.