கருணாநிதி-அத்வானி மீது சரத்குமார் தாக்கு
சென்னை:
ராமன் குடிகாரன் என்று வால்மீகி சொல்லியிருப்பதாக கூறி, இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்திவிட்ட முதல்வர் கருணாநிதி அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
சேது கால்வாய் அமைக்க மாற்று வழி இருந்தால், அதை செயல்படுத்த வேண்டும். மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேணடும். இந்தத் திட்டத்தில் மாற்று பாதையை பலரும் கோரி வரும் நிலையில், அதை எதிர்க்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று சொல்லும் முதல்வர், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். மதச் சர்ச்சையில் அரசியல்வாதிகள் ஈடுபடுவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
இன்று ராமர் இல்லை என்று சொல்வார். நாளை முருகக் கடவுள் யார், அவர் எப்படி மயில் வாகனத்தில் பறக்க முடியும், எப்படி பிள்ளையாருக்கு எலி வாகனமாக இருக்க முடியும். ஐயப்பன் ஏன் குன்றின் மீது இருக்கிறார். வெங்கடாஜலபதியின் பூர்வீகம் என்ன என்றெல்லாம் கேட்பார். இது தான் அரசியல் ஞானமா
ராமன் குடிகாரன் என்று நான் சொல்லவில்லை, வால்மீகி சொல்லியிருக்கிறார். அதை மேடையில் விவாதிக்க அத்வானி தயாரா என்று கருணாநிதி கேட்கிறார். இந்து என்றால் திருடன் என்று சொல்லியிருக்கிறார். ராமாயணத்தில் மது என்பதற்கு தேன் என்று அர்த்தமாகும்.
இந்த விவாதத்தை அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடத்தினால் நானும் மற்றவர்களும் பொது மேடையில் விவாதிக்கலாம்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் திமுகவில் இருக்க வேண்டாம் என்று முதல்வர் சொல்லட்டும். மூடநம்பிக்கை உள்ளவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் சொல்லட்டும் பார்ப்போம்.
ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், ராமரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் குறித்து முதல்ர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
பாஜகவும் மதத்தை வைத்து அரசியல் நடத்துகின்றது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, பாஜக மூத்தத் தலைவர் அத்வானி இருவரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications