திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தவர்?-விஜயகாந்த்
சென்னை:
ராமர் என்ன பொறியாளரா பாலம் கட்டுவதற்கு என்ற முதல்வரை நான் கேட்கிறேன். திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது,
திமுகவும், அதிமுகவும் உங்களுக்கு நன்மை செய்யவில்லை என்பதால் தான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். வேலையில்லா திண்டாட்டம், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை. ஆனால் நான் ஊழலை ஒழிப்பேன் என்று தைரியமாக கூறுகிறேன். இதற்கு சிலர் விஜயகாந்த் கட்சியில் மட்டும் ஊழல் இல்லையா என்று சிலர் கேட்கின்றனர்.
சலவைத் தொழிலாளியிடம் எல்லா வீட்டு அழுக்குத் துணிகளும் வந்து சேர்கின்றது. அதை சலவைத் தொழிலாளி சுத்தம் செய்யவில்லையா. அதுபோல தேமுதிகவும் சலவை செய்து, கறை படிந்தவர்களை திருத்துவோம். அவர்களை ஒழுக்கத்துக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேமுதிகவை எவராலும் அழிக்க முடியாது. ராமர் என்ன பொறியாளரா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், நீங்கள் திருவள்ளுவரை பற்றி புகழ்கிறீர்களே. அவர் எந்தக் கல்லூரியில் படித்தார். கற்புக்கரசி கண்ணகி, மதுரையை தீவைத்து எரித்ததாக கூறுவதை ஒப்புக் கொள்கிறீர்களே. ராமர் பாலத்தை மட்டும் ஏன் கட்டுக்கதை என்கிறீர்கள்.
பெங்களூரில் அவரது மகள் செல்வி வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு முதல்வர், ராமர் குண்டு போட சொன்னாரா, என்று கேட்டுள்ளார். மதுரையில் 3 பேரை எரித்தார்களே, அது மட்டும் சரியா.
தாயுள்ளத்தோடு முதல்வர் பேசுகின்றார் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தாயுள்ளம் இதற்கு முன் தெரியவில்லையா இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. அதற்கு காரணம் ஓட்டுதான். மற்ற மதத்தினரை பகைத்துக் கொண்டால் ஓட்டு கிடைக்காதே.
சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அதற்கு காரணம் அந்த திட்டத்தின் மதிப்பு 2,400 கோடி ரூபாய். இது நின்று போனால் வந்ததை திரும்பத் தர நேரிடுமோ என்ற பயம்தான்.
இதையெல்லாம் கூறினால், என்மீது பொய் வழக்கு போடுவார்கள். சிறையில் அடைப்பார்கள். அதையும் செய்யுங்கள். நான் ஒன்றும் பயந்தவன் இல்லை.
இப்போது அவர்கள் செயல் திட்டங்களையெல்லாம், அவர்களின் புதிய டிவி சானலில் ஒளிபரப்புவார்கள். அவர்கள் டிவியை நம்புவார்கள். ஆனால் அவர்களின் குடும்ப டிவியை நம்ப மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதில் வரும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் பணம் யாருக்கு சென்று சேருகிறோ. கூட்டணி, கூட்டணி என்று சொல்கிறார்கள். ஆனால், மக்கள் முடிவு செய்துவிட்டால் கூட்டணி என்பதே தேவையில்லை.
மற்ற கட்சிகாரர்களுக்கு தனித்து நிற்கும் தைரியம் கிடையாது. ஆனால் எனக்கு இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை அரசியலில் இழந்திருக்கிறேன். என் நோக்கம் தமிழக மக்கள் நன்றாக வாழவேண்டும் என்பதே என்றார் விஜயகாந்த்.