ஆபாச சிடிக்கள் தயாரித்த 3 வாலிபர்கள் கைது
சென்னை:
சென்னையில் ஆபாச டிவிடி, சிடிக்கள் தயாரித்த 3 வாலிபர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் துரைசாகிப் தெருவில் உள்ள உள்ள ஒரு வீட்டில் ஆபாச சி.டிக்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து மத்திய குற்றப்பிரிவின் வீடியோ தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் தர்மராஜன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உதவி கமிஷனர் சுதாகர் தலைமையிலான படையினர் இந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான கம்ப்யூட்டர்கள், டிவிடி, சிடி ரைட்டர்களைக் கொண்டு ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்பட்டு வந்தது உறுதியானது. இங்கு முழுக்க முழுக்க ஆபாச சி.டிக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த சிடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கும்பகோணத்தை சேர்ந்த மனோஜ், ராஜ்குமார், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 70 டிவிடி ரைட்டர்கள், 20 சிடி ரைட்டர்கள், கம்ப்யூட்டர்கள், 10,000க்கும் மேற்பட்ட தமிழ், மலையாள, ஆங்கில, சீன ஆபாச பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கு தயாரித்த சிடிக்களை பர்மா பஜார், சைனா பஜார், ஈவினிங் பஜார், ரட்டன் பஜார் பகுதகிளில் உள்ள கடைகளில் இவர்கள் விற்று வந்துள்ளனர்.
கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.