சன் டிவியை முடக்குவதா?-வைகோ கொந்தளிப்பு
சென்னை:
கேபிள் இணைப்பு இல்லாமல், வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் சன் டிவி குழுமத்தின், சன் டிடிஎச் திட்டத்தினை முடக்குவதற்காக திமுக அரசு காவல்துறையை விட்டு மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொந்தளித்துள்ளார்.
சன் டிவியை வைகோவை விட அதிகமாக யாரும் விமர்சித்து இருக்க மாட்டார். அந்த அளவுக்கு விமர்சித்தவர் வைகோ. இப்போது 'புதிய கணக்குகள்' ஆரம்பமாகிவிட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யாமல் தமிழக அரசு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டது. இதே போல் தன் குடும்ப பிரச்சனைகளுக்கெல்லாம், அரசின் அதிகாரத்தையும், காவல்துறையினரை ஏவிவிட்டு மிரட்டி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
தன்னுடைய வாரிசுக்கு முடிசூட்டுகின்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், மதுரையில் தினகரன் அலுவலகத்தை சூறையாடி, தீயிட்டு 3 அப்பாவி உயிர்களை பறித்த கொடுமையை நடத்திய தன் மகன் மீது எந்தவொரு நடவடிக்கையையும் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.
தன்னுடைய பிள்ளைகளுக்காக தொடங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உதவுவதற்காக, இந்தத் தொழிலில் போட்டியாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தின் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.
சன் டிவியின் வீடுகளுக்கான நேரடி ஒளிபரப்புத் திட்ட (டிடிஎச்) முகவர்களையும், விநியோகஸ்தர்களையும் பல இடங்களில் காவல்துறையினரை ஏவிவிட்டு கைது செய்துள்ளனர்.
மதுரையில் உள்ள அவரின் மகனின் தூண்டுதலோடு கைது செய்யப்பட்ட முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை மிரட்டுகின்ற வேலையிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அதிகாரத்தை முதல்வர் கருணாநிதி தன் சொந்த குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துவதும், காவல்துறையைக் கொண்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications