பாஜக அலுவலகம் மீது தாக்குதல்-4 திமுகவினர் கைது
சென்னை:
சென்னையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக, பாஜக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை தி.நகர் வைத்யராமன் தெருவில் இருக்கும் பாஜக மாநில தலைமை அலுவலகத்தை திமுகவினர் தாக்கியது தொடர்பாக அலுவலக செயலாளர் வடிவேல் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமாச்சாரி, வானதி சீனிவாசன் ஆகியோருடன் சென்று அவர் கொடுத்துள்ள மனுவில்,
அமைச்சர் ஆற்காடு வீராசாமி பாஜக அலுவலகங்கள் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்படி அறிக்கை வெளியிட்டார்.
வன்முறையை தூண்டும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கை காரணமாக திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை செயலாளர் பலராமன், சைதை கிட்டு, சேப்பாக்கம் சுரேஷ்குமார், சைதை சம்பத், திருவல்லிக்கேணி செழியன், புளியந்தோப்பு தமிழ்வேந்தன், கவுன்சிலர் முருகேசன், கபாலிதோட்டம் சண்முகசுந்தரம் மற்றும் அடையாளம் தெரியாத திமுகவினர் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் காலை 9 மணி முதல் அலுவலகம் முன் திரண்டனர்.
அதில் 100 பேர் உருட்டுக் கட்டைக், இரும்பு ராடுகள், கற்களுடன் அலுவலகத்தில் புகுந்து தாக்கினர். இந்தத் தாக்குதலில் மாநில பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன், புஷ்கலா, ராஜசிம்மன், சதீஷ்குமார், வில்லிவாக்கம் ரமேஷ் ஆகியோர் ரத்தக் காயம் அடைந்தனர்.
மேலும் கொடிகள், கதவுகள், ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதில் 3 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரடியாக தூண்டி விட்டனர். அலுவலகத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
காவல்துறை முன்னிலையிலேயே இத்தனையும் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை பதிவு செய்துள்ள போலீசார் சட்டப் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 337 (காயம் ஏற்படுத்துதல்), 427, 7(1)ஏ (சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திமுகவும் புகார்
இதேபோல் திமுக சார்பில் திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் பகுதி செயலாளர் செழியன் பாஜகவினர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில்,
ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எங்கள் மீது பாஜகவினர் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இதில் என் மீதும் என் அருகில் நின்ற தொண்டர்கள் மீதும் கற்கள் வந்து விழுந்தன. எனது தலையில் கல் விழுந்ததில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தேன்.
என் மீது கல் வீசியவர்கள் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தப் புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் சட்டப் பிரிவு 143 (கூடுதல்), 337 (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ்காரரும் புகார்
இவர்கள் போலீஸ்காரர் ஏழுமலை என்பவரும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கும்பலாக வந்து என்னை தாக்கினார்கள் என்று கூறி உள்ளார். யார் அவர்கள் என்று கூறவில்லை.
இதுதவிர சட்ட விரோதமாக கூடியதாக திமுகவினர் மீது தி.நகர் இன்ஸ்பெக்டரும் ஒரு புகார் பதிவு செய்துள்ளார்.
4 திமுகவினர் கைது
இந் நிலையில் பாஜக அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவி, தி.நகரை சேர்ந்த விஜயகுமார், ஓட்டேரியை சேர்ந்த மணிகண்டன், வடபழனியை சேர்ந்த முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இ.முன்னணி அலுவலகம் மீது தாக்குதல்:
இதற்கிடையே சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக 79வது வட்டச் செயலாளர் சாய்குமார், திமுகவை சேர்ந்த முரளி, பாலாஜி, முருகேசன், சரவணன், ரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.