திமுக பந்த்: விளக்கம் அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் அக்.1ம் தேதி நடத்தப்படவுள்ள பந்த்தை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள பந்த் சட்ட விரோதமானது. எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, அக். 1ம் தேதி அரசு சார்பில் பந்த் நடக்கவில்லை. திமுக சார்பில் தான் முழு கடையடைப்பு போராட்டம் நடக்கின்றது.
இந்த பந்த்தின்போது வன்முறைச் சம்பவம் நிகழாவண்ணம் தடுக்கும் வகையில், தமிழக அரசு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி, அரசு தரப்பின் வாய்மொழி உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வன்முறை நிகழாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.