ஏரி, கால்வாய் சீரமைப்புக்கு ரூ.2500 கோடி
நாகர்கோவில்:
தமிழகத்தில் ஏரி, கால்வாய் போன்றவற்றை சீரமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணி துறை செயலளர் ஆதிசேஷய்யா தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப் பணி துறை செயலாளர் ஆதி சேஷய்யா குமரி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென புத்தன்துறையில் ரூ.3.50 கோடி செலவிலும், இணையம்கிழக்கில் ரூ.3 கோடி செலவிலும், துண்டில் வளைவுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வள்ளவிளையில் ரூ.80 லட்சம் செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பெரிய காட்டில் ரூ.4.75 லட்சம் செலவில் தூண்டில் வளைவு விரிவாக்க பணியும் நடைபெற்று வருகிறது.
ராமன்துறையில் ரூ.33 லட்சம் செலவிலும், ராஜக்கமங்கலம் துறையில் ரூ.1.41 கோடி செலவிலும், வாணிக்குடியில் ரூ.33 லட்சம் செலவிலும், கோடிமுனையில் ரூ.22 லட்சம் செலவிலும் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கால்வாய் மற்றும் ஏரிக் குளங்களை சீரமைக்க ரூ.2500 கோடியை உலக வங்கி வழங்கியுள்ளது. காவிரி கால்வாய் பகுதிகள் இதுவரையிலும் சீரமைக்கப்படவில்லை. இதனை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications