கம்யூனிஸ்ட்டுகள் மீது இளங்கோவன் தாக்குதல்
சென்னை:
கம்யூனிஸ நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால், இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்கள் என்று மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது,
மகாத்மா காந்தியை கேலி செய்த வெள்ளைக்காரர்கள் இன்று அவருடைய அகிம்சை கொள்கையை ஏற்றுக் கொண்டு உலக அகிம்சை தினமாக அறிவித்துள்ளனர்.
இந்தியா முன்னேற காங்கிரஸ் கட்சி பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது. அந்தத் திட்டங்களையெல்லாம் வெளியே இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே இருப்பவர்கள் (கம்யூனிஸ்டுகள்) எதிர்த்து வருகிறார்கள்.
நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அது தவறு என்று சொல்லி எதிர்க்கின்றார்கள். ஆனால் கம்யூனிஸ நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால் வரவேற்றிருப்பார்கள்.
மாஸ்கோவில் மழை பெய்தால் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் குடை பிடிப்பார்கள். இவர்கள் தினமும் காங்கிரஸ் அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தால் மீண்டும் மக்களிடம் ஆதரவு கேட்க நாங்கள் தயங்க மாட்டோம்.
விரைவில் காமராஜர் ஆட்சியை இந்த தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். சூழ்நிலை இப்படியிருந்தால் எப்படி அதற்கு சாத்தியமாகும் என்று அனைவரும் நினைக்கலாம். கீழே இருப்பவர்கள் தான் மேலே வருவார்கள். கனவு காண்பதுதான் இவர்களுக்கு வேலை என்று நினைக்காதீர்கள். கனவு ஒரு நாள் நிச்சயம் நனவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications