சட்டசபையைக் கூட்டுகிறார் குமாரசாமி: காங்கிரஸ் உதவியோடு 'மெஜாரிட்டி'?!
பெங்களூர்
கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக அம்மாநில சட்டசபையில் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். வருகிற 18ம் தேதி சட்டசபையைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று பெங்களூரில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட எந்த அமைச்சரும் கலந்து ெகாள்ளவில்லை.
கூட்டம் முடிந்த பின்னர் மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் பசவராஜ் ஹோரஹட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 18ம் தேதி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்றார். ஆனால் அன்றையக் கூட்டத்தில் தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்திகளை வகுக்க முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடாவின் தலைமையில் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில் சட்டசபையைக் கூட்டவும் தனது அரசின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் குமாரசாமி தீர்மானித்திருப்பதன் மூலம் கர்நாடக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பின்போது குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்து ஆட்சியைக் காப்பாற்ற உதவக் கூடும் என்று தெரிகிறது.
இந்தப் புதிய சூழ்நிலையின் பின்னணியில் திட்டமிட்டபடி, கெளடா-பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
எடியூரப்பா டெல்லி விரைந்தார்:
இந்த நிலையில், துணை முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். குமாரசாமி ஒப்பந்தப்படி ஆட்சியை ஒப்படைக்க மறுத்து வருவதால் இடைத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி விட்டது.
இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் விவாதிக்க எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் 'மனசு வைத்தால்' தான் இடைத் தேர்தல் வரும்.












Click it and Unblock the Notifications