ஊக்க மருந்து: மரியான் ஒப்புதல் பதக்கங்கள் பறிப்பு - விளையாட்டிலிருந்தும் ஓய்வு!
அமெரிக்கா:
அமெரிக்க தடகள வீராங்கனை மரியான் ஜோன்ஸ், தான் ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது ஒலிம்பிக் பதங்கங்களைப் பறிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தடகள வீராங்கனையான மரியான் ஜோன்ஸ் கடந்த 2000ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம், 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்றார்.
ஆனால் அந்தப் போட்டிகளில் அவர் பங்கேற்றபோது ஊக்க மருந்து உட் கொண்டிருந்ததாக சோதனையில் தெரிய வந்தது. ஆனால் இதை ஜோன்ஸ் மறுத்தார். இந்த நிலையில் தான் ஊக்க மருந்து உட்கொண்டதாக தற்போது ஒப்புக் கொண்டுள்ளார் ஜோன்ஸ்.
இதுகுறித்து இன்று கண்ணீர் மல்க அழுதபடி செய்தியாளர்களிடம் ஜோன்ஸ் பேசுகையில், நான் ஊக்க மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொள்கிறேன். இதை மறைத்ததற்காக எனது தாயார், கணவர், குழந்தைகள், அமெரிக்க மக்கள், சக வீரர், வீராங்கனைகள் உள்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் அதிகம் நேசித்த தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். கனத்த இதயத்துடன் இதை அறிவிக்கிறேன் என்றார் ஜோன்ஸ்.
ஜோன்ஸ் தனது தவறை ஒப்புக் கொண்டாலும் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்திலும் ஜோன்ஸ் மீது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications