“முதல்வர் விஜய்தான் குற்றவாளி.. அவர்தான் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த இடத்திற்கு சென்றார்” - இன்பதுரை
சென்னை: "முதலமைச்சர் விஜய்தான் குற்றவாளி. அவர்தான் அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்குச் சென்றார். அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் ஏன் ரகசியமாகச் சந்தித்தார் என்று ஆளுநர் மாளிகை தெளிவுபடுத்தச் சொன்ன பிறகும், இதுவரை முதலமைச்சர் விஜய் அதற்கு வாயே திறக்கவில்லை." என அதிமுக எம்.பி இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
குதிரை பேரம் தொடர்பாக அதிமுக சார்பில் அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி இன்பதுரை ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தமிழக டிஜிபியை சந்தித்து புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய மூத்த வழக்கறிஞரும் அதிமுக ராஜ்யசபா எம்.பியுமான இன்பதுரை, "த.வெ.க எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் எனும் வழக்கை தமிழ்நாடு போலீஸே எப்படி விசாரிக்கலாம்? என்னுடைய வழக்கில் நானே நீதிபதியாக இருக்க முடியுமா? தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் என்ற வழக்கை தவெக அரசின் கீழ் இருக்கும் காவல்துறையே எப்படி விசாரிக்க முடியும்?
குதிரை பேரம் எந்த வடிவில் நடந்தாலும் அதை விசாரிக்க வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்த இடத்தில் முதல்வர் விஜய் ஏன் சென்றார்? தூயசக்தி ஆட்சி என்றால் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லுங்க? இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது தான் சரியாக இருக்கும்.
முதலமைச்சர் விஜய்தான் குற்றவாளி. அவர்தான் அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்குச் சென்றார். அவர் அங்கு சென்று சில ஆசை வார்த்தைகளைச் சொன்னதாக குற்றச்சாட்டு உள்ளது. அங்கிருக்கும் அதிமுக எம்எல்ஏக்களைச் சந்தித்துப் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. கரூர் மேயர் சொன்ன பிறகும், அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் ஏன் ரகசியமாகச் சந்தித்தார் என்று ஆளுநர் மாளிகை தெளிவுபடுத்தச் சொன்ன பிறகும், இதுவரை முதலமைச்சர் விஜய் அதற்கு வாயே திறக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
பழனி கோவில் விவகாரத்தில் பத்திரப்பதிவு நடந்தது உண்மை, அதில் தவறு நடந்துவிட்டது என அமைச்சரே சொல்லி இருக்கிறார். அதுகுறித்து அவதூறு என்றால் அவதூறு வழக்குதான் போடமுடியும். போலீசாரை அடியாள் போல பயன்படுத்த முடியாது. அமைச்சர் மீது அவதூறு என்றால் அவர்தான் புகார் கொடுக்க முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications