டெல்லியில் பஸ் தாறுமாறாக ஓடி 8 பேர் பலி
டெல்லி:
டெல்லியில் தனியார் பேருந்து தாறுமாறாக ஓடியதில் 8 பேர் அடிபட்டு உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி, பதேர்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று கிளம்பியது. வெளியே வந்த அந்தப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் சிக்கி அடிபட்டனர். இந்த கோரவிபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
விபத்தால் கொந்தளித்த பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக கற்களை வீசி பேருந்துகளைத் தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் பதட்டம் நிலவியதால் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.