மகளைக் கொன்று, கணவரை சிறையில் தள்ளி மருமகனுடன் உல்லாசம்- பெண் கைது!
மதுரை:
மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த மகளைக் கொன்று விட்டு, அந்தப் பழியை கணவர் மீது போட்டு சிறையில் தள்ளி விட்டு, மருமகனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்த பரபரப்பு விவரம்...
மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதாகும் இவரை பாம்பே பரமசிவம் என்றுதான் அழைப்பார்கள். மும்பையில் பல காலம் வசித்து வந்த பரமசிவம், மும்பை தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்துள்ளார்.
பின்னர் மதுரை திரும்பிய பரமசிவம் ஹோட்டல்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கம்மாள். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார்.
முதல் மனைவி இறந்த பின்னர் மேலூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (50) என்ற பெண்ணை 2வது கல்யாணம் செய்து கொண்டார். பாக்கியலட்சுமி, பரமசிவத்திற்கு உறவுக்காரப் பெண் ஆவார்.
பாக்கியலட்சுமிக்கு வரலட்சுமி, மீனா என இரு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.
வரலட்சுமியை, காண்டிராக்டரான ராஜமாணிக்கம் (இவருக்கு வயது 38) என்பவரைக் கல்யாணம் செய்து வைத்தனர். பிரசவத்தின்போது வரலட்சுமி எதிர்பாராதவிதமாக இறந்து போனார்.
இதனால் ராஜமாணிக்கம் மனைவியை இழந்து வாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று அவ்வப்போது ஆறுதல் கூறுவாராம் பாக்கியலட்சுமி. ஆறுதல் கூறப் போன அவருக்கும், மருமகனுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கள்ளக்காதலில் வீழ்ந்தனர்.
இந்த உறவு இருவருக்கும் பிடித்துப் போக இப்படியே இருந்து விடலாம் என தீர்மானித்தனர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் மறுபடியும் எனது வீட்டுக்கே மருமகனாக வர வேண்டும் என்று கூறிய பாக்கியலட்சுமி, தனது 2வது மகள் மீனாவை, கல்யாணம் செய்து வைப்பதாக ராஜமாணிக்கத்திற்கு உறுதியளித்தார்.
பின்னர் தனது கணவரிடம் பேசி அவரது சம்மதத்தைப் பெற்று மீனாவை, ராஜமாணிக்கத்திற்கு 2வது திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பாக்கியலட்சுமி, ராஜமாணிக்கம் கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.
தனது கணவருக்கு மும்பையில் உள்ள சொத்துக்களை அப்படியே அபகரிப்பதற்காக, அவரது முதல் தாரத்து மகளான ஜெயலட்சுமியை, தனது தம்பிக்கே கட்டி வைத்துள்ளார் பாக்கியலட்சுமி.
அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர். மீனா மூலமாக தனது மாமியாருடன் நெருங்கி விட்ட ராஜமாணிக்கம், தங்கு தடையில்லாமல் இந்த முறையற்ற காம லீலையில் ஈடுபட்டு வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். அடிக்கடி கோவிலுக்குப் போவது, விசேஷங்களுக்குப் போவதாக கூறி விட்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளனர்.
ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராஜமாணிக்கமும், பாக்கியலட்சுமியும் ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது மீனா அங்கு வந்து விட்டார். தனது தாயும், கணவரும் இருந்த கோலத்தைப் பார்த்து அவருக்கு இதயமே வெடித்து விட்டது போலாகி விட்டது.
இப்படி அசிங்கமாக நடந்து கொண்டு விட்டீர்களே என்று தாயிடமும், கணவரிடமும் கண்ணீர் வீட்டுக் கதறியுள்ளார். ஆனால் இருவருமே அதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.
மகள் பார்த்து விட்டாளே என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் மருமகனுடனான கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார் பாக்கியலட்சுமி. ராஜமாணிக்கமும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தாயுடனான கள்ளக் காதலை விடுமாறு கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார் மீனா. ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது பரமசிவம் வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாக்கியலட்சுமி வெளியில் போயிருந்தார். மாமியாருடனான சந்தோஷ உறவுக்கு இடையூறாக இருக்கிறாளே என்று ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மீனாவின் கழுத்தை சேலையால் நெரித்துள்ளார்.
அந்த சமயத்தில் பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தார். மகளின் கழுத்தை மருமகன் நெரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், மருமகனுடன் சேர்ந்து மகளைக் கொலை செய்தார். பின்னர் இருவரும் மீனாவை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட் செய்து விட்டு வீட்டுக் கதவை வெளியில் பூட்டினர்.
பிறகு வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தது போல காட்டிக் கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுது நாடகமாடினர். சப்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பரமசிவத்தைப் பார்த்து, மகளிடம் மோசமாக நடந்து கொள்ள முயன்றார், ஆனால் மீனா மறுக்கவே அவளைக் கொலை செய்து விட்டதாக அசிங்கமான புகாரை தனது கணவர் மீது சுமத்தினார் பாக்கியலட்சுமி.
இதையடுத்து போலீஸார் அப்பாவியான பரமசிவத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைக்குப் போன பிறகுதான் தனது மனைவி மற்றும் மருமகனின் மோசமான நடத்தை பரமசிவத்திற்குத் தெரிய வந்தது.
மகளைக் கொன்று விட்டு, கணவரையும் சிறைக்கு அனுப்பி விட்ட சந்ேதாஷத்தில் இருந்த பாக்கியலட்சுமி, மருமகனுடன் முன்பை விட படு தீவிரமாக உல்லாசம் அனுபவித்தார். அது மட்டுமல்லாமல் அவருடன் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மருமகனின் நடத்தை குறித்து போலீஸில் விரிவாக சொல்லி இருவரையும் கைது செய்ய வைக்க பரமசிவம் சிறையில் இருந்தபடியே நடவடிக்கை மேற்கொண்டார்.
இது ராஜமாணிக்கத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கை திசை திருப்புதவற்காக மீனா வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.
அதன்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் ராஜமாணிக்கம், பாக்கியலட்சுமியின் குட்டு வெளிப்பட்டது. இருவரின் கள்ளக்காதலும் வெளி வந்தது.
இதையடுத்து வாடிப்பட்டியில் பாக்கியலட்சுமியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ராஜமாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.
அவர் தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது.
தனது மனுவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நானும், எனது மாமியாரும் சேர்ந்து மீனாவைக் கொன்றதாக சிபிசிஐடி போலீஸார் செய்தி பரப்பியுள்ளனர். இது கிரிமினல் அவமதிப்புச் செயலாகும்.
எனவே சிபிசிஐடி போலீஸ் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வாதத்தை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, சிபிசிஐடி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடரப்பட்டால், அன்றைய தினமே முன்ஜாமீன் மீதான மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications