அரசு மீதான ஜெ. வழக்கு-அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி:
பந்த் நடத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழகத்தில் பந்த் நடத்தப்பட்டதாக கூறி முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்த திமுக கூட்டணி அழைப்பு விடுத்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து அந்த நாளில், பந்த்துக்குப் பதில் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக கூட்டணி மேற்கொண்டது.
இருப்பினும் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்து சரிவர நடைபெறவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து அதிமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசைக் கண்டித்தது. மேலும், இதுதொடர்பாக மனுதாரர் (அதிமுக) அவமதிப்பு வழக்கைத் தொடரலாம் எனவும் ஆலோசனை கூறியது.
இதையடுத்து சமீபத்தில் அதிமுக சார்பில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மீது அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், சிர்புர்கர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த மனுவை அவசரமாக கருதி விசாரிக்கத் தேவையில்லை.
ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னம், எனவே அதை இடிக்கக் கூடாது என்று மத்திய தொல்பொருள் துறை அறிவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள முதன்மை மனுவுடன் சேர்த்து இதை விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் அறிவித்து ஜெயலலிதாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர்.
அதிமுக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.