முதல்வர் முன்னிலையில் கட்டிப் புரண்ட காங்கிரஸார்!
புதுச்சேரி:
புதுச்சேரி வந்த காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி மற்றும் மாநிலத் தலைவர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடுமையாக அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அருண்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல் முறையாக நேற்று அவர் சென்னைக்கு வந்து தமிழக காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.
வழக்கமாக போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு கோஷ்டியினர் காங்கிரஸ் பொறுப்பாளர்களை வரவேற்பார்கள். ஆனால் என்றும் இல்லாத அதிசயமாக நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அமைதியான முறையில் அருண்குமார் வரவேற்கப்பட்டார்.
சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு அருண்குமார் புதுச்சேரி சென்றார். அங்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ப.சண்முகம், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.
வரவேற்பு நடந்து கொண்டிருக்கும்போதே, முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், மாநில காங்கிரஸ் எம்.பி. நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரங்கசாமி ஆதரவாளர்கள், நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சட்டைகள் கிழிந்தன, வேட்டிகளும் டார் டாராகின. இதைப் பார்த்த அருண்குமார் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
அவர்களை கட்சி நிர்வாகிகள் கடுமையாக முயன்று பிரித்து விட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்த அருண்குமார் பின்னர் முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications