மாநில கல்லூரி மாணவர்கள் பெரும் கலவரம்-போலீஸ் மீது கல்வீச்சு-தடியடியில் பலர் காயம்
சென்னை:
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரியை சூறையாடினர். அதைத தடுக்க முயன்ற போலீசார் மீது மாணவர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கடந்த 12ம் தேதி மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான டேனியல், வினோத் ஆகியோருக்கும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர் சதீஷ் என்பவருக்கும் பஸ்சில் சண்டை மூண்டது.
சதீஷை இருவரும் பயங்கரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சதீஷ், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத், டேனியல் ஆகியோரை கைது செய்தனர். சக மாணவர்கள் கைதான விவரம் தெரிந்தவுடன் மாநிலக் கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்கக் கூறி கல்லூரி முதல்வர் ராமநாதனிடம் கூறினர். ஆனால், அவர் இதில் தான் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் திடீரென படிக்கும் கல்லூரி மீதே தாக்குதலில் இறங்கினர். கண்ணாடிக் கதவுகள், டியூப் லைட்கள், டேபிள், சேர் என்று கண்ணுக்கு தென்பட்ட எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினர்.
மாணவர்களின் தாக்குதலுக்கு பயந்து ஆசிரியர்-ஆசிரியை மற்றும் மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்தத் தகவல் அறிந்த திருவல்லிக்கேணி துணை கமிஷ்னர் பாலசுப்பிரமணி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாருடம் அங்கு விரைந்தார். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
ஆனால், போலீசாரை நோக்கி மாணவர்கள் கற்களை வீசத் தொடங்கினர். இதில் 2 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தையடுத்து மாநிலக் கல்லூரி மூடப்பட்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த வன்முறையால் அந்தப் பகுதியே போர்க் களம் போல காட்சியளித்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.