காதலித்த மகளை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
சென்னை:
10வது வகுப்பு படித்து வந்த தனது மகள் காதலிப்பதை அறிந்த தந்தை, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொடூரமாக கொலை செய்தார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் காசிநாதன். இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் மாடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கவிப்பிரியா அப்பகுதியைச் சேர்ந்த பன்றி மேய்க்கும் இளைஞரை காதலித்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் போய் விட்டது. பள்ளிக்குப் போகாமல் காதலரைச் சந்தித்துப் பேசி வந்துள்ளார்.
கவிப்பிரியாவின் காதல் விவகாரம் காசிநாதனுக்கு தெரிய வந்தது. மகளைக் கண்டித்தார். ஆனால் தந்தையைக் கண்டு கொள்ளாமல் காதலைத் தொடர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த காசிநாதன், தனது பேச்சைக் கேட்காத மகள் மீது கோபம் கொண்டு உருட்டுக் கட்டையால் மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் கவிப்பிரியா படுகாயமடைந்தார். உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கவிப்பிரியா இறந்து போனார்.
மகளைக் கொன்ற காசிநாதன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications