சென்னையில் அகோரம்: சிசுவை கடித்துக் குதறித் தின்ற நாய்கள்
சென்னை: சென்னை கொடுங்கையூரில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவை தெரு நாய்கள் கடித்துக் குறி தின்ற கொடூரம் நடந்துள்ளது.
கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரில் பிரவீண் குமார் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்கு வெளியே நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது.
இதையடுத்து எழுந்து வந்து பார்த்தார் பிரவீண் குமார். அங்கு வீட்டுக்கு அருகே உள்ள குப்பை மேட்டில் 5க்கும் மேற்பட்ட நாய்கள், எதையோ போட்டி போட்டுக் கத்தியபடி கடித்துத் தின்று கொண்டிருந்தன.
இதைப் பார்த்த பிரவீண் குமார் அருகில் சென்று பார்த்தார். நாய்கள் ஒரு சிசுவை குதறியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அவருக்கு மூச்சே நின்றது போலானது.
உடனடியாக, அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து நாய்களை விரட்டினார். பின்னர் சிசுவின் அருகில் போய் பார்த்தார். அந்த பரிதாபத்துக்குரிய சிசு, ஏற்கனவே இறந்து போயிருந்தது. அதன் இரு கைகளும் காணவில்லை.
உடனடியாக போலீஸாருக்கு பிரவீண் குமார் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்த சிசுவின் சிதிலமான உடலை மீட்டனர்.
தவறான உறவில் இந்தக் குழந்தை பிறந்திருக்கலாம், குழந்தையைப் பெற்ற பெண் இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications