5 கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: சிவகங்கை உள்பட ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த பங்கஜ்குமார் பன்சால் சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஆட்சியராக இருந்து வந்த சித்திக், 13வது நிதிக் கமிஷன் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் அமுதா, தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் காகர்லா உஷா, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
நீலகிரி ஆட்சியராக இருந்து வந்த சந்தோஷ் மிஸ்ரா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்து வந்த பிரதீப் யாதவ், வேளாண்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் சிறப்பு ஆணையராக இருந்த பரூக்கி, தொழில்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில்தான் பரூக்கி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இதுவரை அப்பொறுப்பில் இருந்து வந்த சக்திகாந்த தாஸ், வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அண்ணா மேலாண்மை கழக இயக்குநர் நாகராஜன், தமிழக அரசு வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக மச்சேந்திர நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.