இலங்கை கடற்படை சுட்டு தமிழக மீனவர் படுகாயம்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி அட்டூழியம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மீனவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக மீனவர்களை தடுத்து துப்பாக்கியால் சுடுவது, தாக்குவது, மீன்பிடி வலைகளை, படகுகளை பறித்துச் செல்வது, மீன்களை கடலில் தூக்கிப் போடுவது என இலங்கை கடற்படை நீண்ட காலமாகவே அட்டூழியம் செய்து வருகிறது.
இந்த அநியாய செயலைத் தடுக்க இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்ததாகத் தெரியவில்லை. மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கும்போது தமிழக அரசுத் தரப்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் கண்டனங்கள் தெரிவிப்பதோடு பிரச்சினை முடிந்து விடுகிறது. தமிழக மீனவர்களைக் காக்க இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதில்லை.
சமீபத்தில் 99 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்ற அநியாயம் நடந்தது. இதுவரை இந்த அளவுக்கு மீனவர்கள் கடத்தப்பட்டதில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் ேசர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். நேற்று இரவு கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பீதி அடைந்த தமிழக மீனவர்கள் அங்கிருந்து வேகமாக இந்தியப் பகுதிக்குள் தப்பி வந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜ் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரது உடலில் குண்டு பாய்ந்தது. இன்று அதிகாலை கரையை வந்தடைந்த மீனவர்கள், ராஜை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் ராஜ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராஜின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத் தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.