அதிமுக 'நெத்தியடி' நாகையனுக்கு 9 மாத சிறை!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் கருணாநிதி பற்றி மிக அவதூறாகப் பேசிய அதிமுக பேச்சாளருக்கு நீதிமன்றம் 9 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதியன்று அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் 'நெத்தியடி' நாகையன் பேசினார்.
கருணாநிதி பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவர் மிக அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக நகரச் செயலாளர் சிவசுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து நாகையன் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் பாண்டியராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக முதல்வர் பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசியதற்காக 'நெத்தியடி' நாகையன்னுக்கு 9 மாத சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.