கொழும்பில் திடீர் மின்தடை - மக்கள் பதட்டம்!
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று அதிகாலை அரை மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் தலைநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது பாதுகாப்புப் படையினர் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் நேற்று அதிகாலை சுமார் அரை மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப் போகிறார்களோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது.
பின்னர் இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், விமான தாக்குதல் உஷார் நிலைக்காகவும், பயிற்சிக்காகவும்தான் இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் ஒத்திகைதான் இது என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமைதான், கொழும்பு விமான நிலையத்தை விடுதலைப் புலிகள் தாக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து கொழும்பு நகரம் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
விமானத் தாக்குதல் எச்சரிக்கையால், விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவ, காவல்துறை வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே பாதுகாப்புப் படையினர் உள்ளே அனுமதிக்கின்றனர்.
துறைமுகத்திற்குள் வரும் அனைத்து காவல்துறை வாகனங்களும் முன் கூட்டியே கடற்படையின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications