தமிழகத்தில் அதிகாலை வரை கடல் கொந்தளிப்பு - மக்கள் பீதி
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இரவிலும் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்பட்டதால் மக்கள் பீதியடைந்து இரவெல்லாம் தூங்காமல் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
வங்கக் கடலில் ஏற்பட்ட சிதர் புயலால் மொத்தக் கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. சிதர், அதி தீவிர புயல் என்பதால் அது கரையைக் கடக்கும் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் முதலே வங்கக் கடலில் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. நேற்று காலை முதல் இது மேலும் அதிகரித்தது. சென்னை, கடலூர், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் காணப்பட்டது.
சென்னையில் எண்ணூர் திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் அலைகளுடன் கடல் சீறி வந்தது. இதனால் மீனவர்கள் பீதியடைந்து வீடுகளை காலி செய்து விட்டு ஓடினர்.
இந்த நிலையில் நேற்று இரவு, மெரீனா கடற்கரைப் பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத கடல் அலைகள் சீறிப் பாய்ந்து சாலை வரை வந்ததால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
வீடுகளை வீட்டு வெளியே வந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் சாலைகளிலேயே இரவெல்லாம் தங்கியிருந்தனர். மீண்டும் சுனாமி வருமோ என்ற பீதியில் அவர்கள் காணப்பட்டனர்.
இதேபோல கடலூர், கன்னியாகுமரியிலும் இரவில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
வீடுகள் இடிந்தன:
சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், பெரியகுப்பம், கிருஷ்ணாகுப்பம் ஆகிய இடங்களில் கடல் நீர் புகுந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடல் அரிப்பை தடுக்க கடற்கரையோரமாக ராட்சத பாறைகள் அரண் போல் கொட்டப்பட்டு இருந்தாலும், கடல் அலைகள் அந்த பாறைகளைத் தாண்டி கடற்கரை சாலை வரை வந்து தாக்கியதால் மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் அச்சத்துடன் சாலை ஓரங்களிலேயே குடும்பத்துடன் தங்கினர்.
கடலின் சீற்றம் இன்று காலையிலும் நீடித்தது. ஆபத்தான நிலையில் கடற்கரையோரத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
800 மீனவர்களை காணவில்லை:
இந் நிலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 800 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலைமை என்னவாயிற்று என்று தெரியவில்லை.
இதுவரை ஆங்காங்கே 400 மீனவர்கள் வரைதான் கரைக்கு திரும்பியுள்ளனர்.
இது பற்றி மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரகுபதி கூறுகையில்,
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு 200 விசைபடகுகளில் 1,200 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடுமையான கடல் சீற்றம் காரணமாக ஆந்திரமாநிலம் கிருஷ்ணா பட்டினத்துக்கும், காக்கி நாடாவுக்கும் இடையே அவர்கள் நடுக்கடலில் தவிக்கின்றனர்.
அவர்களில் சிலர் மட்டும்தான் கரைக்கு திரும்பியிருக்கிறார்கள். மற்றவர்களை மீட்கும்படி கடலோர காவல் படையினரையும், கடற்படையினரையும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
அமைச்சர் நடவடிக்கை:
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பாதிப்புகள், இழப்பீடுகள் குறித்து உடனடியாக கணக்கெடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வீடுகள் இன்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
கடல் சீற்றத்தால் கடும் பதட்டம்800க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை.