சென்னை விமான நிலைய புதிய ரன்வே: 300 வீடுகளை இடிக்க முடிவு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மாற்று ஓடுபாதையை (ரன் வே)அமைக்க விமான நிலையத்தை ஒட்டியுள்ள 300 வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம் மற்றும் தரப்பாக்கம் பகுதியில் 1,070 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளை இடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில் 300 வீடுகள் இப்போது தான் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளாகும்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கூறுகையில்,
நான் இப்பகுதியில் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். ஆனால் இன்னும் கட்டடம் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என் நிலத்தை அரசு எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். வங்கியில் வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 20,000 ரூபாய் தவணைத் தொகை-வட்டியை கட்டி வருகிறேன் என்றார்.
சத்யா என்பவர் கூறியதாவது, எனது வீடு இந்தப் பகுதியில் தான் இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக எனது வீட்டை இடிக்கப் போவதாக சொல்லிவிட்டனர்.
சென்னையில் தற்போதுள்ள நிலத்தின் விலையால் இனி என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தால் கூட வீட்டை கட்ட முடியாது என்றார் சோகமாக.