பேருந்தில் பயணிகளுக்கு மயக்க லட்டு கொடுத்து பணம் கொள்ளை
புளியங்குடி: பேருந்தில் பயணம் செய்த புளியங்குடியைச் சேர்ந்த இருவருக்கு மதுரையில் மயக்க லட்டு கொடுத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நெல்லை,புளியங்குடி டி.என்.புதுக்குடி பகலமுடையான் தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் மற்றும் குத்தாலம். இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 15ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திருப்பூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் அவர்களிடம் இருவர் பேச்சு கொடுத்துள்ளனர். மாலை 6 மணியளவில் தென்காசி செல்லும் பேருந்தில் ஏறிய அவர்கள் இருவரும் முதலில் கருப்பன் மற்றும் குத்தாலத்துக்கு இடம் பிடித்து கொடுத்தனர்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் மாரியப்பன் கோவில் பிரசாதம் என்று கூறி தனது பையில் இருந்த லட்டுகளை இருவருக்கும் கொடுத்துள்ளனர். லட்டை சாப்பிட்ட இருவரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர்.
அவர்கள் இறங்க வேண்டிய இடமான புளியங்குடி வந்த பிறகும் இருவரும் இறங்காததால் பஸ் கண்டக்டர், குடிபோதையில் இருப்பதாக நினைத்து பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
புளியங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவர்களது உறவினர்கள், இருவரும் மயக்க நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இருவருக்கும் நினைவு திரும்பியது.
குத்தாலம் வைத்திருந்த ரூ. 20,000 அவரது 4 கிராம் மோதிரம், புதிய துணிமணிகள் மற்றும் கருப்பன் வைத்திருந்த ரூ.15,000 ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளது.